Wednesday 25 September 2013

உலகின் சுவாச வெளியைக் காப்போம்


June 5, 2013 at 2:19pm



காட்சிக்கினியதாக இருக்கும் இத்தேயிலை தோட்டங்கள் தான் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழைக்காடுகள் அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாகும்.இப்பசுமை பாலைவனங்களை உருவாக்க ஆங்கிலேய கொள்ளையர்களால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைக்கப்பெற்ற இவ்வழிப்புகள் இன்று வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. தோட்டப்பயிர்களை பயிரிடவும், வணிக நோக்கத்திற்காகவும், சுற்றுலா வளர்ச்சிக்காகவும் கர்னாடகத்தின் குடகு பிரதேசம் தொடங்கி பிரம்மகிரி, தமிழகக் கேரள எல்லைகளையொட்டி நீலகிரி, ஆனைமலைகள், பழனி மலைகள், ஏலமலைகள், குமரி வரை சுமார் 1000கி.மீ தூரத்திற்கு விட்டு விட்டும், சில இடங்களில் தொடர்ச்சியாகவும் இருந்த உலகின் மிக அரிய மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. ஒப்பீட்டளவில் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததில் ஐந்து சதவீத்ததிற்க்கும் குறைவான மழைக்காடுகளே எஞ்சியிருக்கின்றன. இதனால் இப்பகுதிகளின் பல்லுயிர்த்தன்மை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.


இவ்வழிப்பின் பயன்களை பருவமழை பொய்த்த கடந்த ஆண்டிலும், இவ்வாண்டின் கோடையிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆறுகளில் நீர்வரத்து குறைவு, உயரும் வெப்பனிலை போன்றவற்றால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்கிறது. மிக அரிய வனவிலங்குகளின் எண்ணிக்கைகள் சரிந்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாம்ல் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்க்கு வனவிலங்குகள் உணவுக்காகவும், நீருக்காகவும் மலைகளினூடே இருக்கும் வனப் பகுதிகளிலிருந்து மலையடிவார சமவெளிகளிலுள்ள கிராமங்களையும், நகரங்களையும் நோக்கி படையெடுத்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி போன்ற மாவட்டங்களில் பல ஏக்கர் நிலங்களில் பயிர்கள் யானைகளால் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இவ்வனைத்தும் நமது அரிய செல்வங்களான மழைக்காடுகள் அழிக்கப்பட்டதின் விளைவுகளே.


மழைக்காடுகள் இயற்கை நமக்களித்த மாபெரும் கொடை. மொத்த உலகிற்குத் தேவையான உயிர்வளியை வெளியேற்றிக் கொண்டிருப்பவை. அதனால் உலகின் சுவாச வெளியாக திகழ்பவை. அவற்றை முழுமையான அழிவிலிருந்துக் காக்க அழிவை ஏற்படுத்துபவர்களை எதிர்க்கவும், எதிர்க்கத் தவறும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகளையும் செய்ய முயல்வோமென "உலக சூழல் தினமான" இன்று உறுதியெடுப்போம்..

No comments:

Post a Comment