Wednesday 25 September 2013

மோதி - ஆபத்பாந்தவனா, ஆபத்தானவரா?

July 29, 2013 at 12:03am

மாநிலத்தின் அபரிமிதமான மற்றும் துரித வளர்ச்சி, குஜராத் படுகொலைகள் - மோதியின் ஆதரவாளர்களும்,  எதிர்ப்பாளர்களும் இந்த இரு விஷயங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தங்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களின் மேல் நம்பிக்கைகளை வைத்துள்ளனர். இரு தரப்பின் மீதும் எனக்கிருக்கும் கருத்துக்களாவன:

எதிர்ப்பு:      மோதி முதன்மை அமைச்சாராகக் கூடாது என்பதற்கு குஜராத் கலவரங்களை  மட்டும் காரணமாக கூறுவது என்னை பொறுத்த மட்டிலும் வேடிக்கையாகவே இருக்கிறது. ஏனென்றால்,

குஜராத்தில் நடைபெற்ற ஒரே மதக் கலவரமல்ல அது. இந்து மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தூண்டுதல்களின் பேரில் ஏற்கனவே பல கலவரங்களை கண்ட மாகாணம்.

மோதியின் போட்டியாளர்கள் எவரும் அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களை செய்யாதவர்களும் அல்ல. அது பா.ஜ.கட்சியிலேயே வேறு ஒரு வேட்பாளராக இருக்கட்டும், காங்கிரஸ் வேட்பாளராக ஆகட்டும் அல்லது பாரத துணைக் கண்டத்தின் வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் வேட்பாளராகட்டும். ஏதோ ஒரு வகையில் நம்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் கொத்து கொத்தாக கொன்று குவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். மோதி முன்னின்று நடத்தியதாக கூறப்படும் படுகொலைகளுக்கு முன்  நாடு முழுவதும் நடந்த பல்வேறு படுகொலைகளை விட்டு விடுவோம். கடந்த பத்தாண்டுகளில்  தற்கொலை செய்துக் கொண்டு மாண்டு போன விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு ? அவையெல்லாம் என்ன விவசாயிகள் முட்டத் தின்று செறிக்கவில்லை என செய்துக் கொண்ட தற்கொலைகளா? அதற்கு காரணம் ஆட்சியாளர்கள் தானே ?  இவையெல்லாம் எந்த கணக்கில் சேரும்?

கொல்லப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நாம் மொத்தத்தில் தேர்தலையே புறக்கணிக்க வேண்டும். எந்த கட்சியும் நமக்கு  நல்வாழ்வை அளிக்க முற்பட்டெல்லாம் தேர்தலில் போட்டியிடவில்லை. "எரிகிற கொள்ளிகளில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி" என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே நமக்கு அளிக்கபட்டிருக்கிறது. எல்லா கொள்ளிகளும் நம்மை சுட்டெரிக்கவே போட்டியிடுகின்றன. வேகமாக சில கொல்லும், மெதுவாக சில கொல்லும், நேரடியாக சில கொல்லும், மறைமுகமாக சில கொல்லும் அவ்வளவே.

ஆதரவு:         வளர்ச்சி என்ற மாயையை மட்டுமே காரணமாகச் சொல்லி  மோதி மட்டுமே நம் வாழ்வுகளை துலங்க வைக்கும் வல்லமை படைத்த ஒரு பிரதம வேட்பாளர் என்று முன்னிறுத்துவதும் மிக அபத்தமானது. மோதியின் தீவிர வலது சாரி, முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் கண்டிப்பாக சமூகத்தில் சமச்சீரற்ற வளர்ச்சியையே கொண்டு வந்து சேர்க்கும். உலகம் இன்றுவரை கண்டு கொண்டிருப்பது இதைத் தான். சமூகத்தின் ஒரு பிரிவு மக்கள் மிகத் துரிதமான பொருளாதார அடிப்படையிலான் வளர்ச்சியையும், இன்னொரு பிரிவு மிக மோசமான தேக்க நிலை அல்லது  எதிர்மறை வளர்ச்சியையுமே அடைவர்.

இப்போது நாம் கண்டு கொண்டிருப்பது முதல் பிரிவினரின் ஜிகினாக்களை மட்டுமே. வேகமாக பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் சமூகப் பிரிவினரை சிறிது காலத்தில் அடையாளம் காண்போம். துரதிர்ஷ்டவசமாக இந்தியா முழுவதிலுமே, இந்த அறுபது ஆண்டு காலத்தில் வளர்ச்சி காணும் பிரிவிற்காக எதிர்மறை வளர்ச்சியையும், தேக்க நிலையயும் அனுபவித்துக் கொண்டிருக்கும் சமூகப் பிரிவின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்துஆட்சியாளர்களோ, ஆட்சியில் இல்லாத எதிர் மற்றும் வேறு கட்சியினரோ, வளர்ச்சியின் ருசியினை அனுபவிக்கும் எதிர்தரப்பு சமூகப் பிரிவுகளோ ஒரு போதும் அக்கறை கொண்டதில்லை.

எனவே மோதி என்பவர் ஆதரவாளர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவுக்கு ஆபத்பாந்தவனும் இல்லை,  எதிர்ப்பாளர்கள் பயமுறுத்தும் அளவிற்க்கு (மோதி மட்டுமே) ஆபத்தானவரும் இல்லை (குற்றஞ்சாட்டுபவர்களும் அதே அளவு ஆபத்தானவர்கள் தான்).  நரேந்திர மோதியும் 60 ஆண்டுக் காலமாக சம்பிரதாயத் தேர்தல்களில் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் சராசரி வேட்பாளர் மட்டுமே. நாம் நமது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மெல்லச் சாவோம் அல்லது ஒரே நாளில் கொல்லப்படுவோம். யார் பிரதமரானாலும் இது தான் நமக்கு விதிக்கப்பட்ட முடிவு.

No comments:

Post a Comment